தஞ்சை: தஞ்சை கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றனர். தஞ்சை கரந்தை புதுக்குளம் ஜெயின் முதலி தெருவில் ஜெயின் சமூகத்தினருக்கான ஆதீஸ்வரர் கோயில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோயில் குருக்கள் ஜலேந்திரன் தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்று விட்டு நேற்று காலை கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயிலின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் பின்புறமாக சுற்றி வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் பின்னால் உள்ள காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே சென்று சிலைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதில் 3 அடி உயர ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர் சிலை, ஒரு அடி உயர 24-வது தீர்த்தங்காரர் சிலை(தாமிரம்), முக்கால் அடி உயர நவக்கிரக தீட்சதர் வெண்கல சிலை, நவதேவதா வெண்கல சிலை 1, அரை அடி உயர நதீஸ்வரர் 1, ஒன்றரை அடி உயர ஜினவாணி 1, ஒன்றரை அடி உயர ஜோலமணி 1 உள்ளிட்ட 8 சிலைகள் திருட்டு போய் உள்ளது. திருட்டு போன சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சுவாமி சிலைகள் இருந்த ஒவ்வொரு கருவறையின் கதவு பூட்டுகளையும் மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் நுரை ஸ்பிரே அடித்து காட்சிகள் பதிவு ஆகாதபடி செயல்பட்டுள்ளனர். மேலும் கொள்ளை சம்பவத்தை சாமர்த்தியமாக முடித்து திரும்பிய அவர்கள் கோயிலின் பின்பகுதியில் உள்ள கேட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து 200 மீட்டர் தூரமுள்ள வடவாறு கரை வரை மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி அறங்காவலர் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 100 ஆண்டு பழமையான கோயிலில் சிலை திருட்டு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கானா கானார் பஜனைக்கோயில் தெருவில் 100 ஆண்டு பழமை வாய்ந்த பாமா ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது.
நேற்று காலை அர்ச்சகர் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கோயில் நிர்வாகிகள் வந்து பார்த்த போது, கருவறையில் இருந்த மூன்றரை அடி உயர பஞ்லோகத்தால் ஆன வேணுகோபால சுவாமி சிலை திருட்டு போனது தெரிந்தது. புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.